Friday, December 11, 2009

இயமன் வருவது உறுதி!

தன்னை அறியாது,
தாம் நல்லார் என்னாது,
இங்கு இன்மை அறியாது,
இளையர் என்று ஓராது,
வன்மையில் வந்திடும் கூற்றம்
வருமுன்னம் தன்மையின்
நல்ல தவம்செய்யும்
நீரே.

-திருமந்திரம் (255)


உன் நிலையை அறிந்துகொள்ளாமல்,
நீ நல்லவன் என்று எண்ணாமல்,
உனக்கு வறுமை இங்கு உண்டானது என்று நினைக்காமல்,
இளையவன் என்று கருதாமல்,
வலிமையுடைய கூற்றுவன் (இயமன்) உன் உயிரைக் கொண்டு போவான்!
ஆதலால், நீ காலன் வருவதற்கு முன்
உடலை நிலைக்கச் செய்யும் நல்ல தவத்தைச் செய்!


இன்மை - வறுமை
ஓராது - உணராது

Thursday, December 10, 2009

அன்பு வேணும்!

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்! - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா!

-மகாகவி சுப்ரமணிய பாரதி

Wednesday, December 9, 2009

கொடார்! விடார்!

ஆகாது எனினும்,
அகத்து நெய் உண்டாகின்,
போகாதெ றும்பு புறஞ்சுற்றும்;
யாதும்
கொடா அர் எனினும்,
உடையாரைப் பற்றி விடா அர்,
உலகத்தவர்.

-பேதைமை, நாலடியார்


ஒரு பாத்திரத்தின் உள்ளே நெய் இருக்குமானால்,
தமக்கு இல்லையென்றாலும் அந்தப் பாத்திரத்தை விட்டு அகன்று போகாமல்,
எறும்புகள் அதன் வெளிப்புறத்திலேயே விடாமற் சுற்றிக்கொண்டிருக்கும்.
அதுபோலவே,
செல்வம் உடையவரை, அவர் எதுவும் கொடாதவரே என்றாலும்,
உலகத்திலுள்ள பேதை மாக்கள்
அவர்களைப் பற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்; நீங்கவே மாட்டார்கள்!

Monday, December 7, 2009

இன்பமே, எந்நாளும் துன்பமில்லை!

நாளென் செய்யும்
வினைதானென் செய்யும்
எனை நாடிவந்த கோளென் செயும்
கொடுங் கூற்றென் செயும்
குமரேசரிரு தாளும்,
சிலம்பும், சதங்கையும், தண்டையும்,
சண்முகமும், தோளும், கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

-கந்தரலங்காரம்(38)

குமரக் கடவுளான முருகன் திருவடிகளும்,
சிலம்புகளும், சதங்கைகளும், தண்டைகளும்,
ஆறு திருமுகங்களும், பன்னிரு தோள்களும், கடம்ப மலர் மாலையும்
அடியேனுக்கெதிரில் வந்து தோன்றுமானால்,

கொடிய திதி, நட்சத்திரம் கூடிய நாட்கள் என்ன செய்யக்கூடும்?
அடியேனைத் துன்புறுத்துவதற்குத் தேடிவந்த நவக்கிரகங்கள் தான் என்ன செய்யக்கூடும்?
கொடிய இயமனால்தான் என்ன செய்ய முடியும்?!

குமரக்கடவுளைத் தரிசித்த மெய்யடியார்களை நாளும், கோளும், வினையும் வருத்தமுடியாது.
அதனால் "இன்பமே எந்நாளும் துன்பமில்லை."


கொடுங்கூற்று - மணமகனென்றும், இளைஞன் என்றும், ஒரு குலத்திற்கு ஒரு மைந்தனென்றும் பாராது கருணையின்றி உயிரைக் கவர்பவன். உயிரையும் உடலையும் கூறுபடுத்துவதால் கூற்றுவன் எனப்படுவான் இயமன்.

Saturday, December 5, 2009

செல்வப்பயனை அறியாதவர்!

எட்டி பழுத்த,
இருங்கனி வீழ்ந்தன,
ஒட்டிய நல்லறம்
செய்யாதவர் செல்வம்;
வட்டிகொண்டு ஈட்டியே
மண்ணில் முகந்திடும்
பட்டிப் பதகர்
பயன்அறி யாரே.

-திருமந்திரம்(260)


தங்களுக்குப் பொருத்தமான நல்லறத்தைச் செய்யாதவரின் செல்வம்,
எட்டி மரத்தின் பெரிய பழம் பழுத்து, யாருக்கும் பயன்படாது விழுந்து கிடந்ததைப் போலாகும்.
உலகில், வட்டி மேல் வட்டி வாங்கி, மற்றவர்களின் பொருள்களைக் கவர்ந்து கொள்ளும்
வஞ்சமுடையவர்கள், செல்வத்தின் பயனை அறியாதவர்கள் ஆவார்கள்.

எட்டிப் பழம் அழகாயிருந்தாலும், கசப்பாயிருப்பதால் பயன்படாதது போல,
அறம் செய்யாதவனின் செல்வம் பயன்படாது!

பட்டிப் பதகர் - வஞ்சனையை உடைய பாதகர்

Thursday, December 3, 2009

அளவறிந்து வரி கொள்ளும் முறை

குடிகொன்று
இறை கொள்ளுங் கோமகற்குக்
கற்றா மடிகொன்று பால்கொளலும் மாண்பே;
குடியோம்பிக்
கொள்ளுமா கொள்வோற்குக்
காண்டுமே மாநிதியம்
வெள்ளத்தின்
மேலும் பல.

-நீதி நெறி விளக்கம் (29)


குடிமக்களை வருத்தி,
வரியைப் பெறும் அரசனுக்குக்
கன்றையுடைய கறவைப் பசுவின்
பாலை முற்றிலும் கறந்து கொள்ளுதலும் சரியாகப் படும்;
குடிமக்களைப் பாதுகாத்து,
வாங்க வேண்டிய வழியில் வரியை விதிப்போர்க்கு,
பெருமையுடைய செல்வம்
வெள்ளத்திற்கும் மேலாய்ப் பெருகி நிற்கும்.

பாலினைக் கன்றும், தேனினை வண்டும், கவர்தல் போலக் குடிமக்கள் இடர் அடையாமல் அருளோடும் அன்போடும்
அவரவர் தகுதிக்கேற்ப வரியைச் சிறிது சிறிதாக வாங்குதல் அரசனுக்கு (அரசுக்கு) அழகாம்.

Tuesday, December 1, 2009

கல்லாருமிலர்! இல்லாருமிலர்!

தெரிவனநூல் என்றும்
தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே -
ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே
இகழ்ந்தெவரும்
கல்லா தனவும்
கரவு.

-நளவெண்பா(23)


நளன் அரசாண்ட நிடத நாட்டின் சிறப்பை விவரிப்பது.

இந்நகரத்தில்
எங்கும் தெரிவது - நல்ல நூல்கள்!
தெரியாதிருப்பது - வரிகள் பொருந்திய வளைகள் அணிந்துள்ள மாதர்களுடைய இடை!
எப்பொழுதுமே இல்லாதிருப்பது - இரத்தல் (அ) பிச்சையெடுத்தல்!
எல்லோரும் இகழ்ச்சியுடன் ஒதுக்கிக் கற்றுக்கொள்ளாதது - வஞ்சனை செய்தல்!