Monday, December 21, 2009

வராத இளமை!

கிழக்கு எழுந்து
ஓடிய ஞாயிறு
மேற்கே விழக் கண்டும்
தேறார் விழிஇலா மாந்தர்
குழக்கன்று
மூத்துஎரு தாய்ச்
சில நாளில் விழக்கண்டும்
தேறார் வியன்உல கோரே.

-இளமை நிலையாமை, திருமந்திரம்(177)


கிழக்குத் திசையில் வானத்தில் தோன்றி விளங்கும் கதிரவன்
மேற்கில் மறைவதைக் கண்டும்,
அறிவில்லாதவர்கள் 'நிலையாமை' தன்மையை உணரமாட்டார்கள்.

இதைப்போல,
இளங்கன்று சில நாட்களில் வளர்ந்து,
மூப்பெய்தி இறப்பதைக் கண்டும்
அகன்ற இவ்வுலகத்தவர்கள்
'இளமை நிலையாமை'யை உணரமாட்டார்கள்.

Saturday, December 19, 2009

பேதை நெஞ்சே!

செல்வங்கள் கேட்டால்நீ கொடுக்க வேண்டும்,
சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்,
கல்வியிலே மதியினைநீ தொடுக்க வேண்டும்,
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்,
தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்,
துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே
நல்லவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்,
'நமோ நமஓம் சக்தி'யென நவிலாய் நெஞ்சே!

-மகாகவி பாரதியார்

Thursday, December 17, 2009

பெண்மை அரசு

நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
வேற்படையும் வாளுமே கண்ணா
வதன மதிக்குடைக்கீழ் ஆளுமே

பெண்மை அரசு.

-நளவெண்பா(39)


நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு எனப்படும்
நான்கு குணங்களே நான்கு வகைச் சேனைகளாகவும்,

ஐம்புலன்களுமே நல்ல அமைச்சர்களாகவும்,

ஒலி முழங்கும் காற்சிலம்பே அழகிய முரசாகவும்,

வேற்படையும், வாளுமே கண்களாகக் கொண்டு,

தன் முகமாகிய நிலாவட்டக் குடையின் கீழாக
வீற்றிருக்கின்ற பெண்மை அரசின் தன்மையுடன்
விளங்குபவள் அவள் (தமயந்தி).

Tuesday, December 15, 2009

நல்லாரோடு சேர்தல்!

அறியாப் பருவத்து
அடங்காரோடு ஒன்றி,
நெறியல்ல செய்தொழுகி யவ்வும்,
நெறியறிந்த நற்சார்வு சாரக்,
கெடுமே
வெயின் முறுகப் புற்பனிப்
பற்றுவிட் டாங்கு.

-நல்லினம் சேர்தல், நாலடியார்(171)


நன்மை தருவது / தீமை விளைப்பது இதுவென
அறியாத இளம்பருவத்தில்,
அடக்கமில்லாத தீயவரோடு சேர்ந்து, திரிந்து செய்த
முறையில்லாத செயல்களும், குற்றங்களும்,

வெயில் அதிகமாகப்
புல்லின் நுனியிலேயுள்ள பனியானது,
புல்லைவிட்டு நீங்கிப் போவதுபோல,


நன்மையான வழிகளை மட்டுமே அறிந்த
நல்லவர்களுடன் சேர்ந்தால்,
நீங்கிப் போய்விடும்.

Sunday, December 13, 2009

துறவும், உணவும்

துயிற்சுவையும்
தூநல்லார் தோட்சுவையும்
எல்லாம்
அயிற்சுவையின் ஆகுவஎன் றெண்ணி -
அயிற்சுவையும் பித்துணாக்
கொள்பபோல் கொள்ப;
பிறர்சிலர்போல்
மொத்துணா மொய்ம்பி னவர்.

-நீதிநெறி விளக்கம்(86)

ஏனையரைப் போல, ஐம்புலன்களால் துன்பப்படாத தவ வலிமையை உடையவர்கள்,

தூக்கத்தின் இன்பமும்,
குற்றமில்லாத மாதர்களுடைய தோளைத் தவிழும் காம இன்பமும்,
மற்றுமுள்ள எல்லா இன்பங்களும்,
உண்ணுதல் இன்பத்தால் உண்டாகும் இயல்புடையன
என்று கருதி, உணர்ந்து,

பித்துப் பிடித்தவர்கள், சுவையை உணராது, உணவு கொள்ளுதலைப் போன்று
மிகக் குறைந்த அளவே உண்பர்.

Friday, December 11, 2009

இயமன் வருவது உறுதி!

தன்னை அறியாது,
தாம் நல்லார் என்னாது,
இங்கு இன்மை அறியாது,
இளையர் என்று ஓராது,
வன்மையில் வந்திடும் கூற்றம்
வருமுன்னம் தன்மையின்
நல்ல தவம்செய்யும்
நீரே.

-திருமந்திரம் (255)


உன் நிலையை அறிந்துகொள்ளாமல்,
நீ நல்லவன் என்று எண்ணாமல்,
உனக்கு வறுமை இங்கு உண்டானது என்று நினைக்காமல்,
இளையவன் என்று கருதாமல்,
வலிமையுடைய கூற்றுவன் (இயமன்) உன் உயிரைக் கொண்டு போவான்!
ஆதலால், நீ காலன் வருவதற்கு முன்
உடலை நிலைக்கச் செய்யும் நல்ல தவத்தைச் செய்!


இன்மை - வறுமை
ஓராது - உணராது

Thursday, December 10, 2009

அன்பு வேணும்!

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்! - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா!

-மகாகவி சுப்ரமணிய பாரதி