Sunday, November 29, 2009

செல்வோம்!


உடாஅதும்,
உண்ணாதும்,
தம் உடம்பு செற்றும்,
கெடாஅத நல்லறமும் செய்யார்,
கொடாஅது வைத்து
ஈட்டினாரிழப்பர்;
வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி.

-செல்வம் நிலையாமை, நாலடியார்(10)



வானளாவிய மலைமுடிகளை உடைய நாட்டிற்குரிய தலைவனே!

தாம் நன்றாக உடுத்து அனுபவிக்காமலும்,
வயிறார உண்டு பயனடையாமலும்,
தம் உடலை வருத்திக்கொண்டு நல்ல தருமங்களைச் செய்யாமலும்,
யாசகர்களுக்குக் கொடுக்காமலும்,
பொருளைச் சேர்த்து வைப்பவர்கள்,

பற்பல மலர்களிலிருந்து தேனைக் கொண்டு வந்து,
கூட்டிலே சேமித்து வைத்து, பின்
அனைத்தையும் இழக்கும் தேனீயைப் போல,

தம் செல்வங்களையெல்லாம் ஒரே நாளில் உறுதியாக இழந்து விடுவார்கள்!

உய்த்தீட்டல் - உய்த்து + ஈட்டல் - கொண்டு வருதல் + சம்பாதித்தல்/சேகரித்தல்

Friday, November 27, 2009

முதல்வன்!


வாக்குண்டாம்,
நல்ல மனமுண்டாம்,
மாமலராள் நோக்குண்டாம்,
மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

-ஔவையார்



பவள நிறத் திருமேனி கொண்ட,
தும்பிக்கை கொண்ட விநாயகன் பாதத்தில்,
மலரைக் கொண்டு
உடலை வருத்திக்கொள்ளாமல் துதிப்பவருக்கு,
நல்ல வாக்கு உண்டாகும்.
நல்ல மனசு உண்டாகும்.
இலட்சுமி பார்வை கிட்டிவிடும்.



மேனி நுடங்காது - உடலை வருத்திக்கொள்ளாமல்
துப்பார் திருமேனி - பவளம் போன்ற செக்கச் செவேல் நிறத் திருமேனி