Sunday, December 27, 2009

அல்லாவின் அருள்!

கல்லாதவ ராயினும்,
உண்மை சொல்லதவராயினும்,
பொல்லாதவ ராயினும்,
தவமில் லாதவ ராயினும்,
நல்லாருரை நீதியின்படி
நில்லாதவ ராயினும்,
எல்லாரும் வந்தேத்து மளவில்
யமபயங் கெடச் செய்பவன்,
அல்லா, அல்லா, அல்லா!

-மகாகவி பாரதி

Wednesday, December 23, 2009

பிறகு பார்க்கலாம்!

எத்துணை யானும்,
இயைந்த அளவினால்,
சிற்றறம் செய்தார் தலைப்படுவர்;
மற்றைப்
பெருஞ்செல்வம் எய்தியக்கால்,
'பின்னறிதும்!' என்பார்
அழித்தார்,
பழிகடலுத் துள்.

-துன்ப இயல், நாலடியார்(272)


தம்மால் இயன்ற அளவு எவ்வளவேயாயினும்,
சிறிய தருமங்களைச் செய்து வருபவர்கள்
எக்காலத்திலும் மேன்மை நிலையில் இருப்பார்கள்;

பெருஞ்செல்வம் இருந்தும் தருமம் செய்யாது,
'பிறகு பார்க்கலாம்' என்றிருப்பவர்கள்,
'உலக நிந்தனை'க் கடலிலே சிக்கி அழிந்து போவர்.

தலைப்படல் - மேன்மைப்படுதல்
பழி கடலம் - கடல் அளவான பழிச்சொற்களின் மிகுதி

Monday, December 21, 2009

வராத இளமை!

கிழக்கு எழுந்து
ஓடிய ஞாயிறு
மேற்கே விழக் கண்டும்
தேறார் விழிஇலா மாந்தர்
குழக்கன்று
மூத்துஎரு தாய்ச்
சில நாளில் விழக்கண்டும்
தேறார் வியன்உல கோரே.

-இளமை நிலையாமை, திருமந்திரம்(177)


கிழக்குத் திசையில் வானத்தில் தோன்றி விளங்கும் கதிரவன்
மேற்கில் மறைவதைக் கண்டும்,
அறிவில்லாதவர்கள் 'நிலையாமை' தன்மையை உணரமாட்டார்கள்.

இதைப்போல,
இளங்கன்று சில நாட்களில் வளர்ந்து,
மூப்பெய்தி இறப்பதைக் கண்டும்
அகன்ற இவ்வுலகத்தவர்கள்
'இளமை நிலையாமை'யை உணரமாட்டார்கள்.

Saturday, December 19, 2009

பேதை நெஞ்சே!

செல்வங்கள் கேட்டால்நீ கொடுக்க வேண்டும்,
சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்,
கல்வியிலே மதியினைநீ தொடுக்க வேண்டும்,
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்,
தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்,
துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே
நல்லவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்,
'நமோ நமஓம் சக்தி'யென நவிலாய் நெஞ்சே!

-மகாகவி பாரதியார்

Thursday, December 17, 2009

பெண்மை அரசு

நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
வேற்படையும் வாளுமே கண்ணா
வதன மதிக்குடைக்கீழ் ஆளுமே

பெண்மை அரசு.

-நளவெண்பா(39)


நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு எனப்படும்
நான்கு குணங்களே நான்கு வகைச் சேனைகளாகவும்,

ஐம்புலன்களுமே நல்ல அமைச்சர்களாகவும்,

ஒலி முழங்கும் காற்சிலம்பே அழகிய முரசாகவும்,

வேற்படையும், வாளுமே கண்களாகக் கொண்டு,

தன் முகமாகிய நிலாவட்டக் குடையின் கீழாக
வீற்றிருக்கின்ற பெண்மை அரசின் தன்மையுடன்
விளங்குபவள் அவள் (தமயந்தி).

Tuesday, December 15, 2009

நல்லாரோடு சேர்தல்!

அறியாப் பருவத்து
அடங்காரோடு ஒன்றி,
நெறியல்ல செய்தொழுகி யவ்வும்,
நெறியறிந்த நற்சார்வு சாரக்,
கெடுமே
வெயின் முறுகப் புற்பனிப்
பற்றுவிட் டாங்கு.

-நல்லினம் சேர்தல், நாலடியார்(171)


நன்மை தருவது / தீமை விளைப்பது இதுவென
அறியாத இளம்பருவத்தில்,
அடக்கமில்லாத தீயவரோடு சேர்ந்து, திரிந்து செய்த
முறையில்லாத செயல்களும், குற்றங்களும்,

வெயில் அதிகமாகப்
புல்லின் நுனியிலேயுள்ள பனியானது,
புல்லைவிட்டு நீங்கிப் போவதுபோல,


நன்மையான வழிகளை மட்டுமே அறிந்த
நல்லவர்களுடன் சேர்ந்தால்,
நீங்கிப் போய்விடும்.

Sunday, December 13, 2009

துறவும், உணவும்

துயிற்சுவையும்
தூநல்லார் தோட்சுவையும்
எல்லாம்
அயிற்சுவையின் ஆகுவஎன் றெண்ணி -
அயிற்சுவையும் பித்துணாக்
கொள்பபோல் கொள்ப;
பிறர்சிலர்போல்
மொத்துணா மொய்ம்பி னவர்.

-நீதிநெறி விளக்கம்(86)

ஏனையரைப் போல, ஐம்புலன்களால் துன்பப்படாத தவ வலிமையை உடையவர்கள்,

தூக்கத்தின் இன்பமும்,
குற்றமில்லாத மாதர்களுடைய தோளைத் தவிழும் காம இன்பமும்,
மற்றுமுள்ள எல்லா இன்பங்களும்,
உண்ணுதல் இன்பத்தால் உண்டாகும் இயல்புடையன
என்று கருதி, உணர்ந்து,

பித்துப் பிடித்தவர்கள், சுவையை உணராது, உணவு கொள்ளுதலைப் போன்று
மிகக் குறைந்த அளவே உண்பர்.

Friday, December 11, 2009

இயமன் வருவது உறுதி!

தன்னை அறியாது,
தாம் நல்லார் என்னாது,
இங்கு இன்மை அறியாது,
இளையர் என்று ஓராது,
வன்மையில் வந்திடும் கூற்றம்
வருமுன்னம் தன்மையின்
நல்ல தவம்செய்யும்
நீரே.

-திருமந்திரம் (255)


உன் நிலையை அறிந்துகொள்ளாமல்,
நீ நல்லவன் என்று எண்ணாமல்,
உனக்கு வறுமை இங்கு உண்டானது என்று நினைக்காமல்,
இளையவன் என்று கருதாமல்,
வலிமையுடைய கூற்றுவன் (இயமன்) உன் உயிரைக் கொண்டு போவான்!
ஆதலால், நீ காலன் வருவதற்கு முன்
உடலை நிலைக்கச் செய்யும் நல்ல தவத்தைச் செய்!


இன்மை - வறுமை
ஓராது - உணராது

Thursday, December 10, 2009

அன்பு வேணும்!

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்! - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா!

-மகாகவி சுப்ரமணிய பாரதி

Wednesday, December 9, 2009

கொடார்! விடார்!

ஆகாது எனினும்,
அகத்து நெய் உண்டாகின்,
போகாதெ றும்பு புறஞ்சுற்றும்;
யாதும்
கொடா அர் எனினும்,
உடையாரைப் பற்றி விடா அர்,
உலகத்தவர்.

-பேதைமை, நாலடியார்


ஒரு பாத்திரத்தின் உள்ளே நெய் இருக்குமானால்,
தமக்கு இல்லையென்றாலும் அந்தப் பாத்திரத்தை விட்டு அகன்று போகாமல்,
எறும்புகள் அதன் வெளிப்புறத்திலேயே விடாமற் சுற்றிக்கொண்டிருக்கும்.
அதுபோலவே,
செல்வம் உடையவரை, அவர் எதுவும் கொடாதவரே என்றாலும்,
உலகத்திலுள்ள பேதை மாக்கள்
அவர்களைப் பற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்; நீங்கவே மாட்டார்கள்!

Monday, December 7, 2009

இன்பமே, எந்நாளும் துன்பமில்லை!

நாளென் செய்யும்
வினைதானென் செய்யும்
எனை நாடிவந்த கோளென் செயும்
கொடுங் கூற்றென் செயும்
குமரேசரிரு தாளும்,
சிலம்பும், சதங்கையும், தண்டையும்,
சண்முகமும், தோளும், கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

-கந்தரலங்காரம்(38)

குமரக் கடவுளான முருகன் திருவடிகளும்,
சிலம்புகளும், சதங்கைகளும், தண்டைகளும்,
ஆறு திருமுகங்களும், பன்னிரு தோள்களும், கடம்ப மலர் மாலையும்
அடியேனுக்கெதிரில் வந்து தோன்றுமானால்,

கொடிய திதி, நட்சத்திரம் கூடிய நாட்கள் என்ன செய்யக்கூடும்?
அடியேனைத் துன்புறுத்துவதற்குத் தேடிவந்த நவக்கிரகங்கள் தான் என்ன செய்யக்கூடும்?
கொடிய இயமனால்தான் என்ன செய்ய முடியும்?!

குமரக்கடவுளைத் தரிசித்த மெய்யடியார்களை நாளும், கோளும், வினையும் வருத்தமுடியாது.
அதனால் "இன்பமே எந்நாளும் துன்பமில்லை."


கொடுங்கூற்று - மணமகனென்றும், இளைஞன் என்றும், ஒரு குலத்திற்கு ஒரு மைந்தனென்றும் பாராது கருணையின்றி உயிரைக் கவர்பவன். உயிரையும் உடலையும் கூறுபடுத்துவதால் கூற்றுவன் எனப்படுவான் இயமன்.

Saturday, December 5, 2009

செல்வப்பயனை அறியாதவர்!

எட்டி பழுத்த,
இருங்கனி வீழ்ந்தன,
ஒட்டிய நல்லறம்
செய்யாதவர் செல்வம்;
வட்டிகொண்டு ஈட்டியே
மண்ணில் முகந்திடும்
பட்டிப் பதகர்
பயன்அறி யாரே.

-திருமந்திரம்(260)


தங்களுக்குப் பொருத்தமான நல்லறத்தைச் செய்யாதவரின் செல்வம்,
எட்டி மரத்தின் பெரிய பழம் பழுத்து, யாருக்கும் பயன்படாது விழுந்து கிடந்ததைப் போலாகும்.
உலகில், வட்டி மேல் வட்டி வாங்கி, மற்றவர்களின் பொருள்களைக் கவர்ந்து கொள்ளும்
வஞ்சமுடையவர்கள், செல்வத்தின் பயனை அறியாதவர்கள் ஆவார்கள்.

எட்டிப் பழம் அழகாயிருந்தாலும், கசப்பாயிருப்பதால் பயன்படாதது போல,
அறம் செய்யாதவனின் செல்வம் பயன்படாது!

பட்டிப் பதகர் - வஞ்சனையை உடைய பாதகர்

Thursday, December 3, 2009

அளவறிந்து வரி கொள்ளும் முறை

குடிகொன்று
இறை கொள்ளுங் கோமகற்குக்
கற்றா மடிகொன்று பால்கொளலும் மாண்பே;
குடியோம்பிக்
கொள்ளுமா கொள்வோற்குக்
காண்டுமே மாநிதியம்
வெள்ளத்தின்
மேலும் பல.

-நீதி நெறி விளக்கம் (29)


குடிமக்களை வருத்தி,
வரியைப் பெறும் அரசனுக்குக்
கன்றையுடைய கறவைப் பசுவின்
பாலை முற்றிலும் கறந்து கொள்ளுதலும் சரியாகப் படும்;
குடிமக்களைப் பாதுகாத்து,
வாங்க வேண்டிய வழியில் வரியை விதிப்போர்க்கு,
பெருமையுடைய செல்வம்
வெள்ளத்திற்கும் மேலாய்ப் பெருகி நிற்கும்.

பாலினைக் கன்றும், தேனினை வண்டும், கவர்தல் போலக் குடிமக்கள் இடர் அடையாமல் அருளோடும் அன்போடும்
அவரவர் தகுதிக்கேற்ப வரியைச் சிறிது சிறிதாக வாங்குதல் அரசனுக்கு (அரசுக்கு) அழகாம்.

Tuesday, December 1, 2009

கல்லாருமிலர்! இல்லாருமிலர்!

தெரிவனநூல் என்றும்
தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே -
ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே
இகழ்ந்தெவரும்
கல்லா தனவும்
கரவு.

-நளவெண்பா(23)


நளன் அரசாண்ட நிடத நாட்டின் சிறப்பை விவரிப்பது.

இந்நகரத்தில்
எங்கும் தெரிவது - நல்ல நூல்கள்!
தெரியாதிருப்பது - வரிகள் பொருந்திய வளைகள் அணிந்துள்ள மாதர்களுடைய இடை!
எப்பொழுதுமே இல்லாதிருப்பது - இரத்தல் (அ) பிச்சையெடுத்தல்!
எல்லோரும் இகழ்ச்சியுடன் ஒதுக்கிக் கற்றுக்கொள்ளாதது - வஞ்சனை செய்தல்!

Sunday, November 29, 2009

செல்வோம்!


உடாஅதும்,
உண்ணாதும்,
தம் உடம்பு செற்றும்,
கெடாஅத நல்லறமும் செய்யார்,
கொடாஅது வைத்து
ஈட்டினாரிழப்பர்;
வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி.

-செல்வம் நிலையாமை, நாலடியார்(10)



வானளாவிய மலைமுடிகளை உடைய நாட்டிற்குரிய தலைவனே!

தாம் நன்றாக உடுத்து அனுபவிக்காமலும்,
வயிறார உண்டு பயனடையாமலும்,
தம் உடலை வருத்திக்கொண்டு நல்ல தருமங்களைச் செய்யாமலும்,
யாசகர்களுக்குக் கொடுக்காமலும்,
பொருளைச் சேர்த்து வைப்பவர்கள்,

பற்பல மலர்களிலிருந்து தேனைக் கொண்டு வந்து,
கூட்டிலே சேமித்து வைத்து, பின்
அனைத்தையும் இழக்கும் தேனீயைப் போல,

தம் செல்வங்களையெல்லாம் ஒரே நாளில் உறுதியாக இழந்து விடுவார்கள்!

உய்த்தீட்டல் - உய்த்து + ஈட்டல் - கொண்டு வருதல் + சம்பாதித்தல்/சேகரித்தல்

Friday, November 27, 2009

முதல்வன்!


வாக்குண்டாம்,
நல்ல மனமுண்டாம்,
மாமலராள் நோக்குண்டாம்,
மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

-ஔவையார்



பவள நிறத் திருமேனி கொண்ட,
தும்பிக்கை கொண்ட விநாயகன் பாதத்தில்,
மலரைக் கொண்டு
உடலை வருத்திக்கொள்ளாமல் துதிப்பவருக்கு,
நல்ல வாக்கு உண்டாகும்.
நல்ல மனசு உண்டாகும்.
இலட்சுமி பார்வை கிட்டிவிடும்.



மேனி நுடங்காது - உடலை வருத்திக்கொள்ளாமல்
துப்பார் திருமேனி - பவளம் போன்ற செக்கச் செவேல் நிறத் திருமேனி